மும்பை: பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களை விட, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாத மின்சார கார்களுக்கு கூடுதல் கடன் சலுகைகளை அளிக்க ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.
வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 30 சதவீத அளவுக்கு பசுமை கார்கள் என்றழைக்கப்படும் மின்சார கார்கள் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. படிப்படியாக முழுமையாக பசுமை வாகனங்களை அனுமதிப்பது தான் நோக்கம். உலக அளவில் இதற்காக தனி நடவடிக்கைகளை பல அமைப்புகள், வங்கிகள் மேற்கொண்டுள்ளன. இந்தியாவில் விப்ரோ நிறுவனமும், ஸ்டேட் வங்கியும் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி வருகின்றன. வங்கியை பொறுத்தவரை 2030ல் முழுமையாக பசுமை கார்களுக்கு தான் கடன் தருவது என்று திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் பெட்ரோல், டீசல் கார்களுக்கு கடன் தருவதை படிப்படியாக குறைத்து விடுவது என்றும் கருதியுள்ளது.