அகமதாபாத்: குஜராத்தில் நேற்று தனது தாய் ஹிராபாயை சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற பின்னர் பிரதமர் மோடி வாக்குப்பதிவு மையத்துக்கு சென்று வாக்களித்தார். குஜராத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நேற்று நடந்தது. உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வாக்களிப்பதற்காக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றார். காந்தி நகரில் உள்ள ராய்சன் கிராமத்தில் தனது சகோதரருடன் வசித்து வரும் தாயார் ஹிராபாயை (95) பிரதமர் மோடி சந்தித்தார். அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். அப்போது அவரது தாயார் சால்வை, இனிப்பு மற்றும் தேங்காய், பணம் உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும் மோடிக்கு ஆசிர்வாதம் செய்தார். சுமார் 20 நிமிடங்கள் தனது தாயாருடன் செலவிட்ட பின்னர் அவரை பார்ப்பதற்காக திரண்டிருந்த மக்களுடன் சற்று நேரம் கலந்துரையாடினார்.