மோடி அரசை மாற்ற மக்கள் விரும்புகிறார்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு கவலை தரும் விஷயம்: சரத் பவார், சந்திரபாபு நாயுடு பேட்டி

மும்பை: மோடி தலைமையிலான அரசை மாற்றும் மனநிலையில் மக்கள் இருப்பதாகவும்  ஆனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தில்லுமுல்லு மட்டும்தான் தங்கள் கவலை  என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளனர்.  காங்கிரஸ்,  தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி  கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்  தி.மு.க. கட்சி தலைவர்கள் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.இந்த  சந்திப்பின்போது சரத் பவார் பேசுகையில், “மத்தியில் உள்ள மோடி தலைமையிலான  அரசை மாற்றும் முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள். பல தொகுதிகளை பார்த்துள்ளேன். மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். ஆனால் மின்னணு  வாக்குப்பதிவு இயந்திர தில்லுமுல்லு மட்டுமே எங்கள் கவலையாக உள்ளது”  என்றார்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு  கூறும்போது, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய  வாய்ப்பு உள்ளது. பாஜ இதுபோன்ற தில்லுமுல்லு மூலமாக மட்டுமே வாக்குகளை  பெற முடியும். உலகில் இதுவரை 18 நாடுகள் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில்  பொருளாதாரம், தொழில் மற்றும் விவசாயம் மிக மோசமான நிலையில் உள்ளன. முதல் மூன்று கட்டத்தேர்தல் நடந்த கேரளா, கோவா, உத்தரப் பிரதேசத்தில் ஓட்டு இயந்திரங்கள் செயல்படாமல் போனது, தில்லுமுல்லு போன்ற செய்திகள் வந்தன. எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகும். மத்தியில் உள்ள மோடி அரசு மிகவும் ஆபத்தானது. ஜனநாயகம் மிகவும் ஆபத்தில் உள்ளது. எனவே தேர்தல் கமிஷன் ஜனநாயகத்தை காப்பாற்ற வாக்களித்த பிறகு மின்னனு வாக்கு இயந்திரத்தில் வரும் ரசீதை பதிவான வாக்குடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்” என்றார்.

ஆம்  ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் கூறும்போது, “தேர்தல் கமிஷன்  திருதிராஷ்டரைப் போல செயல்பட்டு வருகிறது. எந்த பட்டனை அழுத்தினாலும்  பாஜ.வுக்கு ஓட்டு விழுகிறது” என்றார்.

மூத்த காங்கிரஸ் தலைவர்  சுஷில்குமார் ஷிண்டே கூறுகையில், “50 சதவீதம் வாக்குப் பதிவு ஒப்புகை  வாக்குச்சீட்டுகளை எண்ணுவது நியாயமான கோரிக்கை ஆகும்”  என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: