பெயர் இல்லாமல் நடிகர் ஸ்ரீகாந்த் ஓட்டுப்போட்ட விவகாரம் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில் சென்னை மாவட்டத்தில் பல நடிகர், நடிகைகள் வாக்களித்தனர். நடிகர் சிவகார்த்திகேயன், காந்த், ரமேஷ் கண்ணா, ரோபோ சங்கர் உள்ளிட்ட நடிகர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் காந்த் உள்ளிட்ட இருவர் மட்டும் வாக்குச்சாவடி அலுவலரிடம் சிறப்பு அனுமதி பெற்று வாக்களித்தனர். இது தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் இருவரும் வாக்களித்தது சர்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சிவகார்த்திகேயன் மற்றும் காந்த் வாக்களித்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை  எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும், ஸ்ரீகாந்த் கையில் மை மட்டும் வைக்கப்பட்டதாகவும் அவர் வாக்களிக்கவில்லை என்றும் கூறினார்.  

இந்நிலையில் சாலிகிராமத்தில் உள்ள காவேரி உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி நேற்று விரிவான விசாரணை நடத்தினார். இது தொடர்பான அறிக்கை இன்று தலைமை தேர்தல் அதிகாரிக்கு சமர்ப்பிக்கப்படும்.

இதை தவிர்த்து நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்த வளசரவாக்கம் பகுதி மதுரவாயல் சட்டமன்ற தொகுதியிலும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியிலும் அமைந்துள்ளது. எனவே இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: