மினி பஸ் இயக்க கோர்ட் அனுமதி 14 ஆண்டுகளாக அமலாகாத உத்தரவு

* ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கண்டனம்

* போக்குவரத்து செயலர் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை: மினிபஸ் இயக்க அனுமதி கோரிய வழக்கில் நீதிமன்ற உத்தரவை 14 ஆண்டுகளாக அமல்படுத்தாதது குறித்து விளக்கமளிக்க, போக்குவரத்துத்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரையை சேர்ந்த வீரமணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழக அரசு கிராமப்புற மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும்விதமாக மினி பஸ் திட்டத்தை கொண்டு வந்தது. இதில் அந்தந்த மாவட்ட போக்குவரத்து  மண்டல அலுவலகத்தில் பேருந்து இயக்கும் உரிமையாளர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதில் பேருந்து இயக்க தகுதியானவர்களுக்கு போக்குவரத்து மண்டல அலுவலர் அனுமதி கொடுப்பார் என்று தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு மதுரையில் அரசு அனுமதிகோரி 81 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 18  விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், எங்களுக்கு 2005 வரை மினி பஸ் இயக்க அனுமதி தரவில்லை. இதுகுறித்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில் தகுதியுடைய 18 பேர் மினி பஸ் இயக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த உத்தரவை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி எங்களுக்கு மினி பஸ் இயக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள், ‘‘ஐகோர்ட் ஒரு உத்தரவு பிறப்பித்து 14 வருடங்கள் ஆகிறது. ஆனால் அதிகாரிகள் இதுவரை அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே தமிழக அரசின் போக்குவரத்துத்துறை செயலாளர் இன்று நேரில் ஆஜராகி  விளக்கமளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: