புதுடெல்லி: குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறையின்போது கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு ₹50 லட்சம் இழப்பீடு, அரசு வேலை, வீடு வழங்க வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2002ம் ஆண்டு, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் வன்முறை வெடித்தது. அப்போது, பில்கிஸ் பானு என்ற பெண் 11 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரை கொன்றது. இந்த வழக்கில் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 11 பேருக்கும், 2008ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி, 2 போலீசார், 2 மருத்துவர்கள் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஐபிஎஸ் அதிகாரி உள்ளிட்ட 7 அதிகாரிகளும் குற்றவாளிகள் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ₹5 லட்சம் இழப்பீட்டை ஏற்றுக் கொள்ள மறுத்த பல்கிஸ் பானு, கூடுதல் இழப்பீடு கோரி மாநில அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். விசாரணையில், தவறு செய்த அதிகாரிகள் தொடர்ந்து பணியில் நீடிப்பதாக பானு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.