மேட்டூர் அணை பூங்காவில் காதல் சில்மிஷம் இளம்ஜோடிகளை படம் பிடித்து மிரட்டும் கும்பல்

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் கூடும் இடங்களில் மேட்டூர் அணை பூங்கா முக்கியமானதாக உள்ளது. இந்த பூங்கா, மேட்டூர் அணையை ஒட்டி 33 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. மேல் பூங்கா, கீழ் பூங்கா என இரு பிரிவாக அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவிற்கு நாள்தோறும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், மேட்டூர் அணைக்கட்டு முனியப்பனை தரிசிக்க வருபவர்களும், கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன்மலைக்கு செல்லும் பக்தர்களும் மேட்டூர் அணை பூங்கா விற்கு வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் பூங்காவில் மக்கள் கூட்டம் இருக்கும். இந்நிலையில், இந்த பூங்காவிற்கு அதிகளவில் காதலர்களும், இளம்ஜோடிகளும் வருகின்றனர். காலை 8 மணிக்கே கல்லூரி மாணவர்கள் தோல்பையை மாட்டிக்கொண்டு ஜோடியாக வருகின்றனர். இவர்கள் பூச்செடி மறைவுகளிலும், ஆட்கள் நடமாட்டம் குறைந்த இடத்திலும் சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர்.

 இதனை சிலர் தங்கள் செல்போன் மற்றும் கேமராக்களில் படம் எடுத்துக்கொண்டு, தங்கள் இச்சைக்கு இணங்க வற்புறுத்துகின்றனர். மேலும் படத்தை வெளியிடாமல் இருக்க அவர்களிடம் உள்ள பணம், நகைகளையும் பறித்து செல்கின்றனர். திருமணமான பெண்களும் இதில் சிக்குகின்றனர். வீட்டுக்கு தெரியாமல் வருவதால் மிரட்டல் ஆசாமிகளுக்கு பயந்து ெபண்களும் அவர்களது இச்சைக்கு இணங்குகின்றனர்.  கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேட்டூர் அணை பூங்காவில் ஒரு காதல்ஜோடி சில்மிஷத்தில் ஈடுபட்டதை படம் பிடித்த இருவர், தாங்கள் நிருபர்கள் எனவும் பத்திரிக்கை, தொலைக்காட்சியில் வெளியிடுவதாகவும் மிரட்டி அந்த பெண்ணை தங்களுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தி சில்மிஷம் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிய அந்த இளம்பெண் அணை பூங்கா நுழைவு வாயிலில் இருந்த காவலர்களிடம் இதுகுறித்து கூறினார். மேலும் உறவினர்கள் மூலம் மேட்டூர் போலீசாருக்கும் தகவல் அளித்தார்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார், வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், கடந்த பல மாதமாக அணை பூங்காவிற்கு வந்து, இளம் ஜோடிகளை படம் பிடித்து மிரட்டி பணம் பறித்ததாக ஒப்புக்கொண்டனர். பிரஸ் என்ற அடையாள அட்டையை அச்சடித்து வைத்துக்கொண்டு பூங்காவில் சுற்றி வந்ததாகவும் தெரிவித்தனர்.  இந்நிலையில் சேலத்தை சேர்ந்த அந்த வாலிபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணை சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர். நாள்தோறும் அணை பூங்காவிற்கு பள்ளி, கல்லூரி மாணவிகளை சிலர் சீருடையில் அழைத்து வந்து சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர். போலீசாரும், பொதுப்பணித் துறையினரும் இனியும் மெத்தனமாக இருந்தால் பொள்ளாச்சி, பெரம்பலூர் போல மேட்டூர் அணை பூங்காவிலும் ஆபாச வீடியோ சம்பவங்கள் அரங்கேறும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: