சூமேலூ பூபேயே அமைச்சர்களுடன் ராஜினாமா செய்ததை அடுத்து மாலியில் புதிய பிரதமர் நியமனம்

பாமாகோ: மாலியில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தால் எழுந்த நெருக்கடி காரணமாக பிரதமர்  சூமேலூ பூபேயே மாய்கா அமைச்சர்களுடன் ராஜினாமா செய்தார். இதையடுத்து மாலியில் புதிய பிரதமரை அந்நாட்டு அதிபர் நியமித்துள்ளார்.

மாலியில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டம்

மாலி நாட்டின் மோப்டி அருகே உள்ள ஒகோஸ்சாகோ கிராமத்தில் கடந்த மார்ச் 23ம் தேதி புலானி இனத்தை சேர்ந்த 160 பேர் கும்பலால் துப்பாக்கியால் சுட்டும், வெட்டியும்  கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பின்னணியில் தோகன் பழங்குடியினர் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து மாலியில் அரசுக்கு எதிராக போராட்டங்கள்  வெடித்தன. இதனால், நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. தொடர் வன்முறை சம்பவங்களை பிரதமர் கட்டுப்படுத்த தவறி விட்டதாக எதிர்கட்சிகள்  தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. கடந்த செவ்வாயன்று தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் இப்ராகிம் பாவ்பகார் கெய்டா, பிரதமர் பெயரை குறிப்பிடாமல் தனது அதிருப்தியை தெரிவித்தார்.

பிரதமர் சூமேலூ பூபேயே மாய்கா ராஜினாமா

இதையடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். பிரதமர்  மாய்காவும், அவருடைய  அரசும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்கள்.இதனை தொடர்ந்து பிரதமர் மாய்கா நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அவரது அமைச்சரவையும் ராஜினாமா செய்தது. இவர்களின்  ராஜினாமாவை அதிபர் ஏற்றுக் கொண்டார்.

மாலியில் புதிய பிரதமர் நியமனம்

இந்நிலையில் அந்நாட்டு நிதி அமைச்சர் Boubou Cisseவை அதிபர் இப்ராகிம் பாவ்பகார் கெய்டா பிரதமராக நியமித்து உத்தரவிட்டுள்ளார். விரைவில் Boubou Cisse பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே Boubou Cisse  கடந்த 3 ஆண்டுகளாக நிதி அமைச்சராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: