உளவுத்துறை எச்சரித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை..: பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய இலங்கை அரசு!

கொழும்பு: இலங்கையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு இலங்கை மக்களிடம் அந்நாட்டு அரசு மன்னிப்பு கோரியுள்ளது. கடந்த ஞாயிறன்று ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையின் 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் இதுவரை 320 பேர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று கொழும்பு பேருந்து நிலையம் அருகே 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, செயலிழக்க வைக்கப்பட்டன. செயலிழக்க செய்யும்போது ஒரு வெடிகுண்டு நேற்று வெடித்தது.

இதனிடையே அவசர நிலையை நேற்று நள்ளிரவு முதல் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிரிசேனா பிரகடனப்படுத்தினார். இதையடுத்து, இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று நாடு முழுவதும் தேசிய துக்கதினம் அனுசரிக்கப்படுகிறது. பலியானவர்கள் ஆன்மா சாந்தியடைவதற்காக நாட்டு மக்கள் அனைவரும் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும், இந்த தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையோரை கைது செய்யும் முயற்சியில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது. குண்டுவெடிப்பு தொடர்பாக இன்டர்போல் உதவியும் நாடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய மனித வெடிகுண்டுகளாக செயல்பட்ட 7 பேரின் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

உளவுத்துறை எச்சரிக்கை

இந்த சம்பவம் குறித்து கடந்த 4ம் தேதியே இந்திய உளவுத்துறை கண்டுபிடித்து இலங்கையை எச்சரித்துள்ளது. இந்திய உளவுத்துறை வழங்கிய எச்சரிக்கை தகவலில் கொழும்பில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் இடங்கள் இடம்பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து இலங்கை காவல் தலைவர் பூஜீத் ஜெயசுந்தரா அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் 10 நாட்களுக்கும் முன்பு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கொழும்பில் உள்ள முக்கிய தேவாலயங்கள் மற்றும் இந்திய தூதரக அலுவலகத்தில் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை அரசு மன்னிப்பு

ஆனால், அந்த கடிதத்தையும் இந்திய அரசின் எச்சரிக்கையையும் இலங்கை அரசு அலட்சியம் செய்துவிட்டது. இதை அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளர். இந்த நிலையில் வெடிகுண்டு தாக்குதலுக்கு இலங்கை அரசு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு செய்தித் தொடர்பாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான ரஜித் சேனரத்ன கூறுகையில், 8 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு குறித்து உளவுத்துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது. சில தகவல்களும் அளிக்கப்பட்டிருந்தது. எச்சரிக்கைக்கு கவனம் செலுத்தாததற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். நாங்கள் மிக, மிக வருந்துகிறோம். ஒரு அரசாங்கம் என்ற வகையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் அமைப்புகளுக்கும் நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியுள்ளது. இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மீண்டும் கட்டித் தரப்படும் என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: