டெல்லி : குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் நடைபெற்ற கலவரத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இதையடுடுத்து மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. அப்போது நடந்த வன்முறையில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதில் ராந்திக்பூர் கிராமத்தில் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அவர் குடும்பத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து பில்கிஸ் பானு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் அந்தப் புகாரை வாங்க போலீசார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரை அதிகாரிகள் அச்சுறுத்தியதாகவும், மருத்துவர்கள் போலி பிரேதப் பரிசோதனை சான்றிதழ்களை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பில்கிஸ் பானு சமூக ஆர்வலர்களின் உதவியுடன் குஜராத் சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வன்முறையில் ஈடுபட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி ஆர்.எஸ். போக்ரா, 2 போலீஸ் அதிகாரிகள், 2 மருத்துவர்கள் உள்பட 7 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், குஜராத் கலவரத்தின்போது பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, தங்கும் வசதியுடன் அரசு வேலை வழங்க குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக இருக்கும் காவல்துறை அதிகாரிகள் ஓய்வு பெற்றிருந்தால் அவர்களுக்கான ஓய்வூதிய பலன்களை நிறுத்துமாறும், மும்பை உயர் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியை பதவி குறைப்பு செய்யுமாறும் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. குஜராத் அரசு ஏற்கனவே பில்கிஸ் பானுவுக்கு வழங்கிய ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையை ஏற்க அவர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி