மதுரை: அரசியல்வாதிகளின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள மோட்டார் வாகன சட்டத்தில் இடமில்லை என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலைகளை முறையாக பராமரிக்க உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “அரசியல் கட்சியினர் தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்வது, தலைவர்களின் படங்களை வைத்து கொள்வது, தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக்கொள்வது போன்றவைகளை செய்யாமல் இருந்தாலே பெரும்பாலான விபத்துகள் தடுக்கப்படும். இதுபோன்ற செயல்களுக்கு மோட்டார் வாகன சட்டப்படி அனுமதி உள்ளதா?, இந்த நடவடிக்கைகளுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.