அரசியல்வாதிகளின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்ட அனுமதியில்லை: போக்குவரத்துத்துறை

மதுரை: அரசியல்வாதிகளின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள மோட்டார் வாகன சட்டத்தில் இடமில்லை என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலைகளை முறையாக பராமரிக்க உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “அரசியல் கட்சியினர் தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்வது, தலைவர்களின் படங்களை வைத்து கொள்வது, தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக்கொள்வது போன்றவைகளை செய்யாமல் இருந்தாலே பெரும்பாலான விபத்துகள் தடுக்கப்படும். இதுபோன்ற செயல்களுக்கு மோட்டார் வாகன சட்டப்படி அனுமதி உள்ளதா?, இந்த நடவடிக்கைகளுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்துத்துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசியல்வாதிகள் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள மோட்டார் வாகன சட்டப்படி இடமில்லை. அரசியல் கட்சியினர் தலைவர்களின் படங்களை வாகனங்களில் வைத்து கொள்வதற்கும் அனுமதியில்லை. அரசியல் கட்சியினர் தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக் கொள்வதற்கும் அனுமதியில்லை. இவ்வாறு பதில்மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: