சென்னை: வங்கக்கடலில் ஏப்ரல் 29-ம் தேதி புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: வங்கக்கடலில் வரும் 29-ம் தேதி புயல் உருவாகும். 29-ம் தேதி முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். 25-ம் தேதி இந்திய பெருங்கடல்-தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். அந்த தாழ்வுப்பகுதி 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற்று 29-ம் தேதி புயலாக மாறும் என அவர் கூறினார்.