டாப் ஆர்டர்ல ரன் எடுங்கப்பா... கேப்டன் டோனி கடுப்பு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் நேற்று முன்தினம் இரவு நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய சென்னை அணி 5.5 ஓவரில் 28 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறிய நிலையில், அந்த அணியின் கேப்டன் டோனி பவுண்டரியும் சிக்சர்களுமாகப் பறக்கவிட்டு இலக்கை நெருங்கினார். உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 26 ரன் தேவைப்பட்டது. முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டோனி, அடுத்த பந்தை ஸ்டேடியத்துக்கு வெளியே பறக்கவிட்டார்.

அந்த ஓவரின் முதல் 5 பந்தில் அவர் 24 ரன் (4, 6, 6, 2, 6) விளாச, கடைசி பந்தில் 2 ரன் மட்டுமே தேவைப்பட்டது. உமேஷ் வீசிய அந்த பந்து டோனியின் மட்டையில் படாமல் விக்கெட் கீப்பர் பார்திவ் கைகளில் தஞ்சமடைந்தது. ஆனாலும், ஒரு ரன் எடுப்பதற்காக டோனியும், ஷர்துல் தாகூரும் மின்னல் வேகத்தில் ஓடினர். அதற்குள்ளாக பந்தை துல்லியமாக எறிந்த பார்திவ், தாகூரை ரன் அவுட் செய்தார். சென்னை அணி அந்த ரன்னை பூர்த்தி செய்திருந்தால் சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்சிபி அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்த அந்த அணியின் கேப்டன் விராத் கோஹ்லி நிம்மதிப் பெருமூச்சு விட்டார். கடைசி வரை போராடிய டோனி 84 ரன்னுடன் (48 பந்து, 5 பவுண்டரி, 7 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். படுதோல்வி நிச்சயம் என்ற நிலையில் இருந்து, வெற்றிக்கு மிக அருகே அணியை இட்டுச்சென்ற டோனியின் அசாத்தியமான ஆட்டம் அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றது. அதே சமயம், 19வது ஓவரில் பிராவோ மறுமுனையில் இருந்தபோது, டோனி 3 முறை சிங்கிள்ஸ் எடுப்பதை தவிர்த்ததும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மொத்தத்தில் ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்த இந்த போட்டியின் முடிவில் டோனி கூறியதாவது: இது சிறந்த போட்டியாக இருந்தது என்றே நினைக்கிறேன். எதிரணியை பெரிய ஸ்கோர் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தினாலும், எங்கள் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறிவிட்டனர். முன்னணி வீரர்கள் நல்ல ஸ்கோர் அடித்தால் தான், நடுவரிசையில் களமிறங்கும் வீரர்கள் நெருக்கடி இல்லாமல் பேட் செய்ய முடியும். இல்லாவிட்டால், எடுத்த எடுப்பிலேயே அடித்து விளையாட முடியாது. 5, 6 அல்லது 7வதாக களமிறங்கும்போது நிறைய யோசித்து, கணக்கு போட்டு விளையாட வேண்டி உள்ளது.

ஒரு விக்கெட் வீழ்ந்தாலும் தோல்வி உறுதி என்ற நிலையில் பெரிய ஷாட்களை அடிப்பது எப்படி? அதனால் தான் முதல் மூன்று வீரர்கள் நிலைத்து நின்று விளையாடி வெற்றிக்கு உதவ வேண்டும். இவ்வாறு டோனி கூறினார். ஆர்சிபி கேப்டன் கோஹ்லி கூறுகையில், ‘நூலிழையில் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே போன்று சில போட்டிகளில் நாங்களும் தோற்றுள்ளோம். டோனி உண்மையிலேயே மிரட்டிவிட்டார். அவரது அதிரடி ஆட்டத்தால் கதிகலங்கிவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: