புதுடெல்லி: ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன் இறுதிப் போட்டி, சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றப்படுவதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் பைனல் மே 12ம் தேதி சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடப்பதாக இருந்தது. சிஎஸ்கே அணி நடப்பு சாம்பியன் என்பதால் தொடக்க போட்டி மற்றும் இறுதிப் போட்டி சென்னைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மூன்று (ஐ, ஜே, கே) கேலரிகளை பயன்படுத்த இன்னும் அனுமதி கிடைக்காத நிலையில், பைனலை ஐதராபாத்துக்கு மாற்ற பிசிசிஐ முடிவு செய்தது.
இது குறித்து பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் கூறுகையில், ‘மூன்று கேலரிகளுக்கான அரசு அனுமதி பெறுவதில் சிக்கல் நீடிப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் டிக்கெட் கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாயில் இழப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு பைனலை ஐதராபாத்துக்கு மாற்றி உள்ளோம்’ என்றார்.