சந்தனக்கூடு ஊர்வலத்தின் போது உளவுத்துறை எஸ்ஐக்கு அடி உதை: திருவல்லிக்கேணியில் பரபரப்பு

சென்னை: சந்தனக்கூடு ஊர்வலத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உளவுத்துறை உதவி ஆய்வாளருக்கு சரமாரியாக அடி உதை விழுந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அண்ணாசாலை தர்காவில் நேற்று முன்தினம் இரவு 9.55 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலம்  நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அண்ணாசாலை தர்காவில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் திருவல்லிக்கேணி, ஜாம்பஜார் வழியாக சென்றது.

சந்தனக்கூடு ஊர்வலம் என்பதால் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி திருவல்லிக்கேனி காவல் நிலையத்துக்கு உட்பட்ட உளவுத்துறை உதவி ஆய்வாளர் மெகபூப் பாட்ஷா (52) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ஐஓபி வங்கி அருகே ஊர்வலம் சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் வாலிபர் ஒருவரை 7 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் அடித்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்த உளவுத்துறை உதவி ஆய்வாளர் மெகபூப் பாட்ஷா, அவர்களிடம் சென்று வாலிபர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுத்துள்ளார்.

உளவுத்துறை என்பதால் காவல் துறை சீருடை இல்லாமல் சாதாரண உடையில் மெகபூப் பாட்ஷா இருந்தார். அப்போது, 7 பேர் கொண்ட கும்பல், நீ என்னடா தடுக்கிறாய் என்று கூறி, அவரை தாக்கியுள்ளனர்.  உதை வாங்கிய உதவி ஆய்வாளர்  தனது செல்போனை எடுத்து, தன் மீது தாக்குதல் நடத்திய அந்த வாலிபர்களை படம் பிடித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் மெகபூப் பாட்ஷாவை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் மெகபூப் பாட்ஷா முகம் உடல் முழுவதும் வீக்கம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு சக போலீசார் வருவதற்குள், தாக்குதல் நடத்திய 7 பேர் கும்பல் அங்கிருந்து தங்களது ஆட்டோவில் தப்பியது. இதுகுறித்து, மெகபூப் பாட்ஷா ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிறகு தப்பி சென்ற 7 பேர் கும்பல் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டது.

அதை தொடர்ந்து ஓட்டேரியை சேர்ந்த ஆனந்த் (30), திருவல்லிக்கேணி சாதிக் (45), புளியந்தோப்பு திருவிக நகர் 4வது தெரு சதாம் உசேன் (35), கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் பகுதி ஜமீல் (27) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: