சென்னை: தமிழகத்தில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனத்திற்கான அரசாணையை எதிர்த்த வழக்கை வரும் 29ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பாக சென்னை கொளத்தூரை சேர்ந்த யோகநாதன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பிற்கான சட்டத்தை ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் இந்த குழுவில் உறுப்பினர்களாக, அரசியல்வாதிகள், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமே இடம் பெற்றிருப்பதாகவும், இது தொடர்பாக தலைமை நீதிபதிகளிடன் கலந்து ஆலோசனை பெறவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுடன் கலந்து ஆலோசிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், ஆனால் தமிழகத்தில் இந்த சட்டம் இயற்றப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். எனவே லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனங்களுக்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.