சென்னை மெரினாவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி : சென்னை மெரினாவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த மனுவை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏற்கனவே மெரினாவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும், கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி நினைவிடம் அமைக்கப்படுவதாகவும் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, மேல்முறையீடு காலத்தில் ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதால், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதாகவும், இன்றைய தேதியில் குற்றவாளி இல்லை என்பதால் அரசு சார்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு நினைவிடம் கட்டப்படுவதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.மாநில கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை மண்டலம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் அனுமதி பெற்று கட்டுமானப் பணிகள் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை விதிக்க முடியாது என கூறி இந்த மனுவை  தள்ளுபடி செய்தனர்.

ஜெயலலிதா குற்றவாளியல்ல என நீதிபதிகள் கருத்து

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு முன்னரே ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை. எனவே ஜெயலலிதாவை தண்டிக்கப்பட்ட குற்றவாளி என சொல்ல முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தலைவர்களுக்கு நினைவிடம் அமைப்பது அரசின் கொள்கை முடிவு இதில் நீதிமன்றம் தலையிடாது என தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ரவிஉயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பிரச்சனையில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: