மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம் தேர்தல் நடத்தும் அலுவலரை இடமாற்றம் செய்ய வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக கூட்டணி கட்சிகள் மனு

சென்னை: மதுரை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பெண் அதிகாரி நுழைந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக, சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது:

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக செய்திகள்  தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் (20 ம் தேதி)  மாலை சம்பூர்ணம் என்கிற வட்டாட்சியர் அந்த வளாகத்திற்குள் நுழைந்து ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் மூன்று மணி நேரமாக இருந்திருக்கிறார்.  அவரோடு வேறு மூன்று நபர்களும் இருந்திருக்கிறார்கள். இவர்களிடம் அடையாள அட்டையும் இல்லை. காவல்துறை அவர்களை மூன்று மணி நேரத்திற்கு பின்பே கண்டுபிடித்து தடுத்து வைத்திருக்கிறது. மாவட்ட ஆட்சித்  தலைவர் அலுவலக அதிகாரிகள் தலையிட்டு அழைத்துச் சென்றுள்ளனர்.

 மாவட்ட ஆட்சித் தலைவரை தொடர்பு கொள்ள முயற்சித்து முடியாத நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் நீண்ட நேரம் போராடிய பிறகும், வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு மாவட்ட ஆட்சித்  தலைவர் வரவில்லை. பின்னிரவு 12.30 மணிக்கு பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்த போது வேட்பாளர் இந்த விசயம் குறித்து தெரிவித்த பிறகு தான் தனக்கு தெரியும் என்று  கூறியிருக்கிறார். இது நம்பத்தகுந்ததாக இல்லை. இந்நிலையில் தபால் வாக்குகளில் முறைகேடுகள் செய்வதற்கான முயற்சியாகவே சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.எனவே, ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட அறையை முத்திரையிட வேண்டாம் என உத்தரவிட்டது யார். சட்டவிரோதமாக ஆவண அறைக்குள் புகுந்த அலுவலருக்கும், அவருடன் சென்றவர்களுக்கும், அறையை  திறப்பதற்கும் ஆவணங்களை எடுப்பதற்கும் உத்தரவிட்டவர்கள் யார். யாரும் அவருக்கு உத்தரவிடவில்லையெனில் சம்பந்தப்பட்ட அலுவலர் யாருக்கும் தெரியாமல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதன் உள்நோக்கம் என்ன.  மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி ஒருவர் பாதுகாக்கப்பட்ட அறைக்குள் செல்வதும், அதை மூன்று மணி நேரம் வரை காவல்துறையினர் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதும் எப்படி ஆகிய கேள்விகள் முக்கிய

மானவை.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வளவு மோசமான சம்பவம் நடந்த பிறகும், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும்  தேர்தல் நடத்தும் அலுவலர் மதுரையிலேயே இருந்த போதும், சம்பவ இடத்திற்கு வராததும், சில மணி நேரங்களுக்கு பின்பு வேட்பாளர் வெங்கடேசன் சொன்ன பிறகு தான் இந்த பிரச்னையே தனக்கு தெரியும் என்று சொன்னதும்  ஆச்சரியமளிக்கிறது.எனவே, இந்த சம்பவம் குறித்து முழுமையான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மதுரை  நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியை மாற்றி வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும். மதுரை நாடாளுமன்ற தொகுதி உட்பட அனைத்து தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு முழுவதுமான துணை ராணுவ பாதுகாப்பு ஏற்பாடு செய்திட வேண்டும். தபால் வாக்குகள்  விநியோகம், பதிவு, எண்ணிக்கை ஆகியவை குறித்து சிறப்பு பார்வையாளரை நியமிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: