லக்னோ: கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பிகாரில் பாஜ கூட்டணி அதிக இடங்களில் கைப்பற்றிய நிலையில், 2015ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் லாலு தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை இணைந்து மெகா கூட்டணி அமைத்தன. இக்கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, நிதிஷ் குமார் முதல்வரானார். லாலுவின் மகன் தேஜஸ்வி துணை முதல்வரானார். லாலுவின் இன்னொரு மகன் தேஜ் பிரதாப் மாநில அமைச்சரானார். எனினும், லாலுவுடனான கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மெகா கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷ் குமார், பாஜவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து முதல்வரானார். பாஜவைச் சேர்ந்த சுனில்குமார் மோடி துணை முதல்வராக உள்ளார். இந்த கட்சிகள் தற்போதைய தேர்தலில் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. எதிர்க்கட்சிகள் வரிசையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.
இதற்கிடையே ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவை விஷம் கொடுத்து கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி பகீர் குற்றம்சாட்டை முன்வைத்துள்ளார். மக்களவை தேர்தல் நேரத்தில், ரப்ரி தேவி கொலை சதி திட்டம் குறித்து குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘லாலுவுக்கு சிறையில் ஆபத்து நேரிட்டால் வீதிகளில் போராட்டங்கள் வெடிக்கும். அவருக்கு விஷம் கொடுத்து கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பீகார், ஜார்க்கண்ட் மக்கள் சும்மா விட மாட்டார்கள். மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். சிறையில் லாலுவை சந்திக்க அவரது மகன்கள் உள்ளிட்ட உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவருக்குத் தேவையான மருத்துவ வசதிகளை சிறை அதிகாரிகள் செய்யவில்லை’’ என்று குற்றம் சாட்டினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி