பாழடைந்த கட்டிடத்தில் கிடந்த வெடிகுண்டு வெடித்து சிறுமி காயம்

அண்ணாநகர்: பெரம்பூரில் பாழடைந்த கட்டிடத்தில் கிடந்த குண்டு வெடித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில், ஒரு சிறுமி காயமடைந்தார். பெரம்பூர் ராஜிவ்காந்தி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் காயத்ரி (11). இச்சிறுமி, அதே  பகுதியில் தனது பாட்டியுடன் வசித்து வருகிறாள். இதே பகுதியில் ஒரு பாழடைந்த கட்டிடம் உள்ளது. இதில், அப்பகுதி மக்கள் வீட்டிற்கு தேவையான விறகுகளை போட்டு வைத்துள்ளனர்.  இந்நிலையில், நேற்று முன்தினம்  மாலை சிறுமி காயத்ரி வீட்டிற்கு விறகு சேகரிப்பதற்காக அந்த பாழடைந்த கட்டிடத்திற்கு சென்றுள்ளார். அங்கு கிடந்த கற்களை எடுத்து, விறகுகளை உடைத்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு விறகை உடைக்க கல்லை தூக்கி  போட்டபோது அது ‘டமார்’ என்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதில், கற்கள் சிதறி சிறுமி காயத்ரிக்கு கை மற்றும் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.தகவலறிந்து வந்த  ஐசிஎப் போலீசார் மேற்கண்ட கட்டிடத்தில் சோதனை நடத்தினர். அப்போது பூமிக்கு அடியில் 2 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு  செய்து, வெடிகுண்டுகளை பதுக்கியது யார், கொள்ளை கும்பலா அல்லது வேறு யாராவது பதுக்கி வைத்திருந்தார்களா என்று விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: