அண்ணாநகர்: பெரம்பூரில் பாழடைந்த கட்டிடத்தில் கிடந்த குண்டு வெடித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில், ஒரு சிறுமி காயமடைந்தார். பெரம்பூர் ராஜிவ்காந்தி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் காயத்ரி (11). இச்சிறுமி, அதே பகுதியில் தனது பாட்டியுடன் வசித்து வருகிறாள். இதே பகுதியில் ஒரு பாழடைந்த கட்டிடம் உள்ளது. இதில், அப்பகுதி மக்கள் வீட்டிற்கு தேவையான விறகுகளை போட்டு வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சிறுமி காயத்ரி வீட்டிற்கு விறகு சேகரிப்பதற்காக அந்த பாழடைந்த கட்டிடத்திற்கு சென்றுள்ளார். அங்கு கிடந்த கற்களை எடுத்து, விறகுகளை உடைத்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு விறகை உடைக்க கல்லை தூக்கி போட்டபோது அது ‘டமார்’ என்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.