மது குடிப்பதை கண்டித்த தந்தைக்கு கத்திக்குத்து:மகன் கைது

சென்னை:சென்னை பாடி, முகப்பேர் சாலையை சேர்ந்தவர் சவுதப்பன் (51), நிலத்தரகர். இவரது மகன் அனில்குமார் (21). கல்லூரி மாணவன். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில்  குடிபோதையில் வீட்டுக்கு வந்த  அனில்குமாரை தந்தை சவுதப்பன் கண்டித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அனில்குமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சவுதப்பனை குத்திவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த சவுதப்பனை உறவினர்கள்  மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனில்குமாரை கைது செய்தனர்.

* செங்குன்றம் அழுதிவாக்கம், செல்வ விநாயகர் நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் வாசுதேவன் (38). ஐகோர்ட் வக்கீல். இவரது வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து பீரோவில் இருந்த 20 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள்  மற்றும் 30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்னர்.

* ராமாபுரம், பூதப்பேடு, டைமண்ட் தெருவை சேர்ந்த கவுசிக் ஸ்ரீராம் (27) என்பவரின் மெக்கானிக் கடையை உடைத்து பைக் மற்றும் உதிரி பாகங்கள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற ராயப்பேட்டையை சேர்ந்த  முகமது மைதீன் (21), தோகித்பாஷா (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* புதுவண்ணாரப்பேட்டை, நாகூரான் கார்டனை சேர்ந்த சரவணக்குமார் (50) என்பவரின் செல்போனை பைக் ஆசாமிகள் பறித்துக்கொண்டு தப்பினர்.

* டி.பி.சத்திரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஸ்டீபன் (எ) குணசேகரன் (26), கருப்பு (எ) ஞானசேகரன் (24), கீர்த்திவாசன் (21), சரத்குமார் (21), தமிழரசன் (19), செந்தில்குமார் (24),  வினோத்குமார் (27), சரவணன் (31), வினோத் (27) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, கார், பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

* செங்குன்றம் பாலவாயல் - சோத்துப்பாக்கம் சாலையில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் கோயில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் பித்தளை பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

* தண்டையார்பேட்டையில் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறில் அன்னை சந்தியா நகர் 3வது தெருவை சேர்ந்த ஜெயபிரகாஷ் (22) என்பவரை தாக்கிய அதே பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ் (22), அவரது நண்பர்  சுகுமார் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய ராஜி (21) என்பவரை தேடி வருகின்றனர்.

* ராயபுரம் சிமிண்டரி சாலை ஓரமாக நடந்து சென்ற 55 வயது மதிக்கத்தக்க பெண் டேங்கர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை பார்த்த பொதுமக்கள் லாரி டிரைவர் திலான் (26), அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த  கிளீனர் அஜித்குமார் (20) ஆகியோரை பிடித்து தர்மஅடி கொடுத்து காசிமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

* மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த லதா (54)என்பவரிடம் 8 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

* சென்னை எம்.கே.பி.நகர் மத்திய நிழல் சாலையில் கத்தியுடன் பைக்கில் திரிந்த வியாசர்பாடியை சேர்ந்த மணிகண்டன் (24), பிரியதர்ஷன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் செல்போன்களை திருடி வந்த பெங்களூருவை சேர்ந்த நாகராஜ் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: