திருவொற்றியூர்: சென்னை அண்ணா நகரை சேர்ந்த அருணாச்சலம் என்பவருக்கு சொந்தமான குடோன், மாதவரம் எம்.ஆர்.எச். சாலையில் உள்ளது. இங்கிருந்து குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்நிலையில், நேற்று காலை இந்த குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால், உள்ளே வைத்திருந்த பொம்மைகள் எரிய தொடங்கின. இதை பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். தகவலறிந்து செங்குன்றம், மாதவரம், மணலி, அம்பத்தூர், பெரம்பூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 6க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, 30க்கும் மேற்பட்ட வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.