காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேசத்தில் உள்ள தனது பாரம்பரிய தொகுதியான அமேதியிலும், கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவை தொகுதியிலும் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இத்தொகுதிக்கு உட்பட்ட மனந்தவாடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தியை ஆதரித்து, அவருடைய சகோதரியான பிரியங்கா காந்தி நேற்று பிரசாரம் செய்தார். அதில் அவர் பேசியதாவது: இது எனது நாடு, இந்த மலைப்பகுதிகள் என் நாட்டை சேர்ந்தது, உத்தர பிரதேசத்தின் கோதுமை வயல்கள் என் நாட்டை சேர்ந்தது. தமிழ்நாடு என தேசம், குஜராத், வடகிழக்கு மாநிலங்கள் எல்லாம் எனது நாடு என்ற நிலை இருந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகால பாஜ ஆட்சி நாட்டை பிரிவினை செய்துவிட்டது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அறுதிபெரும்பான்மையுடன் ஒரு அரசு மத்தியில் அமைந்தது. அவர்கள் பொதுமக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவார்கள் என நினைத்தோம். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டனர். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்ததும், அரியணையில் அமர்த்தியவர்களை மறந்து விட்டார்கள். அதிகாரம் என்பது மக்களுக்கு சொந்தமானது என்பதை மறந்து விட்ட பாஜ.வினர், அது தங்களின் உடமை என நினைக்கின்றனர். பொதுமக்களுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும் என பாஜ தலைவர் கூறுவது ஏமாற்று வேலை. ராகுலின் இதயத்தில் இருந்து வரும் ஜனநாயகமும், கருத்து சுதந்திரமும் மொழியாகவும் கலாசாரமாகவும் வெளியாகிறது. எனவே, ராகுலுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி