சென்னை: நாடு முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்து 3ம் நாள் உயிர்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். கி.பி. 29ம் ஆண்டிலிருந்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதாக வரலாறு கூறுகிறது. பாவங்களிலிருந்து உலக மக்களை விடுவிப்பதற்காக அவதரித்த இயேசு கிறிஸ்து 30 வயது வரை பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார். பின்னர், யோவான் என்ற ஞானியிடம் ஞானஸ்நானம் பெற்ற பின், கடவுளின் மைந்தனாக அவரது திருப்பணிக்கு தன்னை அர்ப்பணித்தார். பாவிகளிடமிருந்து உலகத்தை மீட்க தனது திருப்பணியை தொடங்கினார். அவருடன் அவரது சீடர்கள் 12 பேரும் மக்களுக்கு பாவங்களை சுட்டிக்காட்டினர். பகைவனிடத்திலும் அன்பாயிருங்கள் என்பது உள்ளிட்ட அவரது போதனைகளால் உலக நாடுகளில் அவரின் பெயர் பிரபலமானது. . இது யூத மதகுருமார்களுக்கு இயேசுவின் மீது கோபத்தை ஏற்படுத்தியது. அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினர். இதையடுத்து, இயேசுவின் மீது பல்வேறு குற்றங்களைச் சுமத்தி அவரை சிலுவையில் அறைந்தனர். இயேசுவின் இந்த பாடுகளை அனுசரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சாம்பல் புதன் அன்று தொடங்கி இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்த நாளான புனித வெள்ளிவரை கிறிஸ்தவர்கள் நோன்பு கடைபிடிப்பார்கள்.