தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ பதிவிட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று மாலை போலீசார் வாலிபரை கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே உள்ள பறையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முரளி(32). இவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை பற்றி தரக்குறைவாக பேசி வீடியோ ஒன்றை கடந்த 19ம் தேதி சமூக வலைதளங்களில் பதிவிட்டாராம். சிறிதுநேரத்தில் இந்த வீடியோ வைரலாக பரவியது. இதனால், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் அவதூறு வீடியோவை வெளியிட்ட முரளியை கைது செய்ய வலியுறுத்தி நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் காட்டாமுந்தி பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.