சென்னை,: கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயை அணைத்ததால் நோயாளிகள் உயிர் தப்பினர்.சென்னை கேளம்பாக்கத்தில் செட்டிநாடு பன்னோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி உள்ளது. மருத்துவமனையின் சி பிளாக்கின் முதல் மாடியில் இயங்கி வரும் மெடிக்கல் கடையின் ஏசி மெஷினில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது. மருத்துவமனை முழுவதும் புகை மண்டலமாக மாறியதால் பரபரப்பு நிலவியது.தகவலறிந்ததும் கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உடனடியாக முதல் மாடியில் உள்ள சிறப்பு அறைகளில் தங்கியிருந்த 20 நோயாளிகள் வேறு பிளாக்குக்கு மாற்றப்பட்டனர். சிறுசேரி, மறைமலைநகர் மற்றும் திருக்கழுக்குன்றம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி, ஏசி மெஷினில் இருந்து பரவிய தீயை அணைத்தனர். இதனால் நோயாளிகள் உயிர் தப்பினர்.இதுதொடர்பான புகாரின்படி, கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.