கொடைக்கானல்: கொடைக்கானலில் குளுகுளு சீசன் துவங்கியதையடுத்து சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். ‘மலைகளின் இளவரசி’ எனப்படும் கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் துவங்கியுள்ளது. பள்ளி மற்றும் வார விடுமுறை, கொடைக்கானலில் நிலவும் இதமான சூழல், குளுகுளு சீசனை அனுபவிக்கும்விதமாக நேற்று சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்தனர். கடந்த வாரத்தை விட இந்த வாரம் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. நேற்று மேகமூட்டம் அவ்வப்போது கண்ணாமூச்சி காட்டுவது போன்று ஜாலம் காட்டியது. இதன் காரணமாக தூண் பாறையை மேகம் முத்தமிடும் அழகிய காட்சியை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர். அதுபோல ‘க்ரீன் வேலி வியூ’ எனப்படும் தற்கொலை முனை பகுதியில் மேகமூட்டம் இல்லாமல் இருந்தது.