ஆட்சியிலிருந்தாலும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் கிறிஸ்தவர்களுக்காக திமுக பாடுபட்டு வருகிறது: ஈஸ்டர் திருநாள் வாழ்த்தில் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: “ஆட்சியிலிருந்தாலும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் திமுக கிறிஸ்தவர்களுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது” என்று ஈஸ்டர் திருநாள் வாழ்த்து செய்தியில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஈஸ்டர் திருநாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இன்னல்களையும், இருளையும் வெற்றி கண்ட இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த நாளான “ஈஸ்டர் திருநாளை” மகிழ்ச்சியுடன்  கொண்டாடும் கிருத்துவப் பெருமக்கள் அனைவருக்கும் திமுக சார்பில் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு, கருணை, மனித நேயம் போன்றவற்றின் அடையாளமாகவும், மனித குலம்  போற்றும் புனிதராகவும் திகழும் இயேசுபெருமானின் இந்த நாள் கிருத்துவப் பெருமக்களின் இனிய நாள்.  திமுக எப்போதும் கிருத்துவ மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள பேரியக்கம்.

தமிழ் மண்ணிற்கு வந்த அயல்நாட்டுக் குருமார்களாகிய மாமேதைகள் வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோருக்கு கடற்கரையில் கம்பீரமான சிலைகளை அமைத்து-அந்த அறிஞர்கள் ஆற்றிய தமிழ்தொண்டை  இன்றைய இளைய தலைமுறையினருக்கு அடையாளம் காட்டியவர் முதல்வராக இருந்த அண்ணா. பிறகு முதல்வராக பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் கிருத்துவ மக்களின் சமூக, கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கான  பல்வேறு அரிய திட்டங்களை நிறைவேற்றியவர். குறிப்பாக  மனித நேயத்தின் மறு உருவமான அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழாவினை மிகச்சிறப்பாகக் கொண்டாடி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே  ஆட்சியில்  கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்திற்கு “அன்னை தெரசா மகளிர் வளாகம்” எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தவர்.

ஆட்சியிலிருந்தாலும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் எப்போதும் கிருத்துவ மக்களின் அன்பைப் பெற்ற திமுக அவர்களுக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்பதை நினைவூட்டி,  இந்நன்னாளில் கிருத்துவ சமுதாய  மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை  தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: