சென்னை: எண்ணூர் துறைமுகத்துக்கு வந்த 60 ஆயிரம் டன் மலேசிய மணல் ஒரு மாதமாக விற்பனை தொடங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த மணல் ஒரு யூனிட் ரூ.10 ஆயிரத்து 350க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே எண்ணூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்து மணல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், 6வது முறையாக 55 ஆயிரம் டன் மணல் காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த துறைமுகத்தில் இருந்து மணல் முழுவதுமாக விற்பனை செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த மாதம் 60 ஆயிரம் டன் மணல் எண்ணூர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த மணல் முன்பதிவுக்காக உடனடியாக திறக்கப்படுவது வழக்கம். ஆனால், காட்டுபள்ளி துறைமுகத்தில் மணல் விற்பனை ஆகவில்லை. இதனால், எண்ணூர் துறைமுகத்தில் மணல் முன்பதிவு தொடங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.