பண்ருட்டி: பண்ருட்டி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 20 ஆண்டுக்கு முன்பு ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் பகுதியில் பனை மரங்கள் அதிகளவு இருந்தன. இவை நீர்நிலைகளின் கரைகளை பாதுகாத்து உறுதி அளித்தன. காலம் மாற மாற பனை மரங்கள் அழியும் சூழ்நிலை ஏற்பட்டது. பனை மரங்களால் கிடைத்து வந்த பொருட்களைகொண்டு பனைஏறும் தொழிலாளர்கள் வாழ்ந்து வந்தனர். இதில் கிடைக்கும் பதனீர் வெயில் காலத்தில் சூட்டை தணித்து அல்சர், வாய்ப்புண், நீர்கடுப்பு, மலச்சிக்கல், மூட்டு வலி, பெண்கள் கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீர் பிரச்னைகள், நீரிழிவு நோய் ஆகியவற்றிற்கு இயற்கை மருந்தாக இருந்தது.இதனை அரசு சரியாக ஊக்கப்படுத்தி இருந்தால், தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்தும், நோய்களிலிருந்தும் காப்பாற்றி இருக்கலாம். கடலூர் மாவட்டத்தில் உண்ணாமலைரெட்டிசாவடி, திருச்சோபுரம், கீழ்பட்டாம்பாக்கம், விழமங்கலம், கொக்குப்பாளையம் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் பனைமர தோப்புகள் உள்ளன. இந்த தொழிலை மட்டுமே நம்பி சுமார் 2000 குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். அந்தந்த நகர பகுதியில் கூட்டுறவு சங்கங்கள் துவங்கி செயல்பட்டு வந்தன. தற்போது தமிழ்நாடு பனைபொருள் வாரியம் சார்பில் செயற்பதிவாளர் அனைத்து உதவி இயக்குனர்களுக்கு 01.04.2009 முதல் 31.03.2020 வரை பனை மரத்திலிருந்து பதனீர் இறக்கி விற்பனை செய்ய ஆணை பிறப்பித்து இருந்தார். ஆனால் இந்த உத்தரவு காவல்துறையில் உரிய முறையில் கடிதம் வழங்கியும் இதுநாள்வரை பதனீர் இறக்க முடியவில்லை. இதனால் இந்த தொழிலை நம்பி மட்டுமே வாழும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவிற்கே வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.