திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடியின் பொதுக்கூட்ட மேடை அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரரின் துப்பாக்கி வெடித்தது எப்படி என்பது குறித்து போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி 2 நாட்களுக்கு முன் இரவு திருவனந்தபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். இதற்காக, கூட்டம் நடந்த சென்ட்ரல் ஸ்டேடியம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ேபாடப்பட்டிருந்தது. இந்நிலையில், மோடி வருவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பாக பொதுக்கூட்ட மேடை அருகே பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போலீஸ்காரின் துப்பாக்கி வெடித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ்காரரிடம் இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாகவும், இது பாதுகாப்பு குறைபாடாக கருதப்பட்டதால் உடனடியாக அந்த போலீஸ்காரர் அங்கிருந்து மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து திருவனந்தபுரம் சரக ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாம் நேற்று கூறுகையில், ‘‘பிரதமர் மோடி வருவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் பொதுக்கூட்ட மேடை அருகே பாதுகாப்பில் இருந்த கொல்லம் ஆயுதப்படை போலீஸ் ஒருவரின் துப்பாக்கி வெடித்தது உண்மைதான். ஆனால், துப்பாக்கி தவறுதலாக வெடிக்கவில்லை. வழக்கமாக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் தங்களிடம் உள்ள துப்பாக்கியை முன்னரே பரிசோதிப்பது வழக்கம். இதுபோல், அந்த போலீஸ்காரர் துப்பாக்கியை பரிசோதித்தபோது சரியாக இயங்கவில்லை.
இது குறித்து அவர் சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் முன்னிலையில் துப்பாக்கி தரையில் சுட்டு பரிசோதிக்கப்பட்டது. பின்னர் தான் துப்பாக்கி செயல்பட தொடங்கியது. அதன் பிறகு போலீஸ்காரர் பாதுகாப்பு பணியை முடித்து விட்டு அங்கிருந்து சென்றார். நீண்ட நாட்களாக அந்த துப்பாக்கி பயன்படுத்தாமல் இருந்ததால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி