சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். அப்போது, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் செங்குட்டுவன், சுப்ரமணி, மகேந்திரன், ஜீவன் உள்ளிட்டார் உடன் இருந்தனர். இந்த சந்திப்பிற்கு பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: அனைத்து வேட்பாளர்களையும், திமுக வேட்பாளராக கருதி கடுமையான பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். அவருக்கு மதிமுக சார்பில் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தோம். 40ம் நமதே என்று சொன்னதில் ஒரு தொகுதியில் தேர்தல் நடக்கவில்லை. அந்த தேர்தலை நடத்தாமலேயே ஆம்பூர், குடியாத்ததிற்கு தேர்தல் நடத்தியது தேர்தல் ஆணையத்தின் ஒரு தலைபட்சமான செயலை காட்டுகிறது.அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் மே 19ல் இடைத்தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தல் குறித்து கருத்துக்களை நாங்கள் திமுக தலைவரிடம் பரிமாறி கொண்டோம். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ெவற்றி பெற மதிமுக பாடுபடும். எங்களது நிர்வாகிகள் ஒரு அர்ப்பணிப்போடு பணியாற்றுவார்கள்.பாப்பிரெட்டிபட்டி பகுதிகளில் மறுவாக்குபதிவு நடத்த வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை நியாயமானது. தேர்தல் ஆணையம் இதை ஏற்றுக்கொண்டு அங்கு மீண்டும் மறுவாக்குபதிவு நடத்த வேண்டும். அதே போன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோளின் படி பொன்பரப்பியில் மறு வாக்குபதிவு நடத்த வேண்டும். பொது அமைதி நிலவ வேண்டும். அதற்கு காவல்துறை கலவர உணர்வை ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்ைக எடுக்க வேண்டும்.