கோவை, ஈரோடு, நெல்லையில் ஒற்றை யானை அட்டகாசம்

கோவை:  தமிழகத்தில் கோைட காலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் தண்ணீருக்காக விலங்குகள் அவதிப்படுகின்றன. இதனால், அருகில் இருக்கும் கிராம பகுதிகளில் நுழைந்து விடுகின்றன. இவற்றில் யானைகள் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன. நேற்று ஒற்றை யானை  வீடு, தென்னை, பனை மரங்கள் சேதம்  செய்தது தெரியவந்தது. கோவை ஆனைகட்டி சேம்புக்கரை வனகிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (58). பி.எஸ்.என்.எல் ஊழியர். இவர் தன் குடும்பத்தினர் 7 பேருடன் நேற்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலையில் வனத்திலிருந்து வெளியேறிய ஒற்றை யானை பெருமாள் வீட்டின் முன் இருந்த மதில் சுவர், ஆஸ்பெஸ்டாஸ் சீட் ஆகியவற்றை உடைத்து தள்ளியது. பிறகு ஓட்டு வீட்டு கூரை மற்றும் முன் பக்க சுவரை உடைத்து உள்ளே செல்ல முயன்றது. அப்போது சப்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து பார்த்தனர். வெளியே யானை நிற்பதையறிந்து வேறு ஒரு அறையில் பதுங்கினர். மேலும், சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் விரைந்து வந்து  யானையை விரட்டினர்.

இதனைதொடர்ந்து வனத்துறையினர் தனிக்குழு அமைத்து யானையை கண்காணித்து வருவதாக கோவை ரேஞ்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

வாழை மரங்கள் நாசம்:  ஈரோடு மாவட்டம் பவானிசாகர் போலீஸ் குடியிருப்புக்குள் நேற்றுமுன்தினம் இரவு 1 மணியளவில் ஒற்றை யானை நுழைந்துள்ளது. அங்குள்ள ஒரு தோட்டத்துக்குள் புகுந்து 50 வாழை மரங்களை சேதப்படுத்தியது. இதேபோல், நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிதம்பராபுரம் மலையடிவார பகுதியான சத்திரங்காட்டில் ஒற்றை யானை புகுந்தது. இந்த யானை, விவசாயிகள் சந்திரசேகர் (63), கோயில்பிச்சை (70) ஆகியோரின் 3 பனை மரங்களை வேரோடு சாய்த்தது. இதனால், யானைகள் வனத்தை விட்டு வெளியே வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: