மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் நேற்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்றிரவு துவங்கிய ‘தசாவதாரம்’ விடிய விடிய நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழாவையொட்டி, மதுரை வண்டியூர் அருகே வைகையாற்று மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு அழகர் சாப விமோசனம் வழங்கும் நிகழ்வும், தேனூர் மக்களுக்கு மரியாதை அளிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதற்காக நேற்று காலை 6 மணியிலிருந்து வண்டியூர் வீரராகவபெருமாள் கோயிலில் அழகருக்கு ஏகாந்த சேவையும், தொடர்ந்து திருமஞ்சனமும் நடைபெற்றது. காலை 11 மணிக்கு வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயிலில் இருந்து, சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபம் வந்து அழகர் காட்சியளித்தார். தேனூர் மண்டபத்தில் காலை 11 மணியிலிருந்து, மாலை 3 மணி வரை திருமஞ்சனமாகி, கருடவாகனத்தில் காட்சி தந்து மண்டூக முனிவருக்கு சாபம் போக்கும் நிகழ்வும் நடத்தப்பட்டது.