கொல்கத்தா: ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வீழ்த்தியது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதும் 35வது லீக் போட்டி நேற்று இரவு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தார். துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோஹ்லி, பார்திவ் படேல் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 18 ஆக இருந்தபோது பார்திவ் படேல் நிதிஷ் ராணாவிடன் கேட்ச் ஆனார். அடுத்து வந்த அக்ஷ்யதீப் நாத்(13ரன்), ரஸ்ஸல் பந்தில் உத்தப்பாவிடம் கேட்ச் ஆனார். அவரை தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி, வந்த வேகத்தில் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார். தொடர்ந்து மட்டையை சுழற்றிய அவர், குல்தீப் யாதவ் வீசிய 16வது ஓவரில் 4,6,4,6,வைட்,6 என சிக்சரும், பவுண்டரியுமாக பறக்கவிட்டார். ஆனால், அதே ஓவரின் கடைசி பந்தில் பிரஷித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மொயின் அலி 28 பந்துகளை மட்டுமே சந்தித்து 66 ரன் எடுத்தார். 40 பந்துகளில் அரை சதம் அடித்த கோஹ்லி, கடைசி ஓவரின் 5வது பந்தில் பவுண்டரி அடித்து ஐபிஎல் போட்டியில் தனது 5வது சதத்தை பூர்த்தி செய்தார்.