அண்ணாநகர்: கோயம்பேடு பஸ் நிலைய பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வெளியூர் செல்வதற்காக ஒரு பயணி ஆட்டோவில் வந்து இறங்கினார். ஆட்டோ டிரைவருக்கு பணம் கொடுக்க, அவர் தனது பெட்டியை ஆட்டோவில் வைத்துவிட்டு சில்லறை மாற்றுவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார்.ஆட்டோவை நிறுத்திவிட்டு, வெளியே டிரைவரும் காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு சிறுவன், ஆட்டோவில் இருந்த பெட்டியை திருடிக்கொண்டு தப்ப முயன்றான். இதை பார்த்த ஆட்டோ டிரைவர், அவனை சுற்றி வளைத்து பிடித்து, தர்ம அடி கொடுத்தார்.பின்னர் அவனை கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அந்த சிறுவன் பள்ளி மாணவன் என்பதும், ஏற்கனவே போரூரில் ஒருவரிடம் செல்போன் பறித்ததும், பின்னர் பைக் மூலம் கோயம்பேடு வந்து, பயணியின் பெட்டியை திருட முயன்றதும் தெரியவந்தது.அவனிடம் இருந்து ஒரு பைக் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அந்த பள்ளி மாணவனை கைது செய்தனர்.