டெல்லி: புள்ளிப்பட்டியிலில் 3வது இடத்தில் உள்ள டெல்லியும், 4வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் இன்று மோதுகின்றன. போட்டியில் வெற்றிப் பெறும் அணி 3வது இடத்தை உறுதிச் செய்யும்.ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டி இன்று இரவு டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன. ஐபிஎல் தொடர்களில் இந்த 2 அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் பஞ்சாப் 14 போட்டிகளிலும், டெல்லி 9 போட்டிகளிலும் வென்றுள்ளன. திறமையான வீரர்கள் இருந்தும் திடீரென சொதப்பும் அணி என்றால் அது டெல்லிதான். அருமையாக ஆடத் தொடங்கி கடைசியில் தோல்வியை எட்டும் அணியாக இருக்கிறது. அதற்கு இந்த தொடரில் ஏற்கனவே பஞ்சாப் அணியுடன் மோதிய போட்டிதான் உதாரணம். அந்தப் போட்டியில் 8 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்களை பறிகொடுத்தது டெல்லி. அதனால் பஞ்சாப் 14ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
அதே நேரத்தில் பஞ்சாப் அணியும் டெல்லி அணிக்கு சளைத்ததில்லை. அந்த அணியிலும் அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களும் டெல்லியை போலதான் நன்றாக விளையாடினாலும் கடைசி நேரத்தில் தோல்வியை தழுவிக் கொள்கிறார்கள். ஏற்கனவே டெல்லி அணியை தோற்கடித்த உற்சாகத்தில் பஞ்சாப் அணி இன்று களமிறங்கும். ஆனால் சொந்த மண்ணில் விளையாடுவது டெல்லி அணிக்கு கூடுதல் பலம். அதனால் அது பதிலடி கொடுக்க போராடும்.இரண்டு அணிகளும் தலா 10 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் டெல்லி 3வது இடத்திலும், பஞ்சாப் 4வது இடத்திலும் இரு்கின்றன. அதனால் இன்று வெற்றி பெறும் அணி 3வது இடத்தை உறுதி செய்யும்.