தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த திமுக வக்கீல் ஓட, ஓட விரட்டி கொடூரக்கொலை: மதுரையில் பரபரப்பு

மதுரை: தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த திமுக வக்கீலை ஓட, ஓட விரட்டிச்சென்று, கொடூரமாக ஒரு கும்பல் வெட்டிக்  கொலை செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை, கீரைத்துறை வாழைத்தோப்பை சேர்ந்தவர் எம்.எஸ்.பாண்டியன் (46). திமுக பிரமுகரான இவர் திமுக முன்னாள் மண்டல  தலைவரான வி.கே.குருசாமியின் மருமகன். வக்கீல். இவர் நேற்று காலை நாகுப்பிள்ளைதோப்பு பகுதியில் உள்ள ஒரு  வாக்குச்சாவடிக்கு வெளியே முகவர் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், இவரை  விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டினர். உயிர் தப்பிப்பதற்காக எம்எஸ்.பாண்டியன் ஓடிச்சென்று திறந்து கிடந்த வீட்டிற்குள்  பதுங்கினார். ஆனாலும் கும்பல் உள்ளே புகுந்து அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.

ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பரிசோதனையில் அவர்  ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டது.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் கீரைத்துறை போலீசார் கூறுகையில்,  ‘‘முன்னாள் மண்டலத்தலைவர்கள்  வி.கே.குருசாமி, ராஜபாண்டி  ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதத்தில், ஒருவருக்கு ஒருவர் வெட்டியதில் இதுவரை 12  பேர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது கொலையான எம்எஸ்.பாண்டியனை, ராஜபாண்டி தரப்பினர் தான் கொலை செய்திருக்க  வாய்ப்புள்ளது. குற்றவாளிகளை தேடி வருகிறோம்’’ என்றனர்.

எட்டு மாதத்துக்கு முன்பு ஆள் மாறாட்ட கொலை

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கும்பல் எம்.எஸ்.பாண்டியன் என நினைத்து, ரேஷன் கடைக்குள் வைத்து ஒருவரை  கொலை செய்து  விட்டு தப்பியது. அப்போது நடந்த விசாரணையில் கொலையில் சிக்கியவர்கள், ‘‘எம்.எஸ்.பாண்டியன் என நினைத்து, ரேஷன்  கடைக்கு வந்தவரை கொலை செய்து விட்டோம்’’ என்று வாக்குமூலம் அளித்திருந்தனர். அதன்பின் மிகுந்த பாதுகாப்புடன் இருந்த  எம்.எஸ்.பாண்டியனை, நேற்று தேர்தல் பணியில் இருந்த நேரத்தை பயன்படுத்தி கும்பல் கொலை செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: