பல்லாவரம்: மாங்காடு அடுத்த முகலிவாக்கத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் கணக்கில் வராத ₹1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மாங்காடு அடுத்த முகலிவாக்கம் மெயின் ரோடு, ஏ.வி. நகர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்கள் இன்றி ₹1 லட்சம் எடுத்து செல்வது தெரியவந்தது.
விசாரணையில், காரில் இருந்தவர் தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரவிகுமார் (47) என்பதும், இவர் கட்டிடங்களின் உட்புறங்களை அழகுபடுத்தும் தொழில் செய்து வருகிறார் என்றும், வேலை செய்யும் ஆட்களுக்கு சம்பளம் கொடுக்க ₹1 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு காரில் செல்வதாகவும் கூறினார். முறையான ஆவணம் இல்லாததால், தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி