புதுடெல்லி: நாட்டின் முதல் லோக்பால் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி பினாகி சந்திர கோஸ் நேற்று பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க தேசிய அளவில் லோக்பாலும், மாநிலங்கள் அளவில் லோக் ஆயுக்தா அமைக்கும் சட்டம் கடந்த 2013ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பல மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்ட நிலையில், லோக்பால் அமைப்பதில் மட்டும் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக நீதிபதி பினாகி சந்திர கோஸ் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதி பினாகி சந்திர கோஸ், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றவர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி