குடியாத்தம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டத்தில் மூச்சு திணறி கூலித்தொழிலாளி பரிதாபமாக பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கே.வி.குப்பம் பகுதியில் நேற்றிரவு 7 மணியளவில் பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக அதிமுகவினர் கே.வி.குப்பம் தொகுதி முழுவதும் இருந்து பொதுமக்களை நேற்று பிற்பகல் 3 மணி முதலே சரக்கு வாகனங்களில் அழைத்து வந்து கே.வி.குப்பம் பஸ் நிலையத்தில் குவித்தனர். குறுகிய இடத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. வேலூரில் நேற்று 102.4 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால் வயது முதிர்ந்தவர்கள் வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் நிழல் தேடி அலைந்தனர். நேரம் ஆக ஆக கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுகவினர் ஏற்பாடு செய்திருந்த லோடு ஆட்டோவில் கே.வி.குப்பம் அடுத்த சோழமூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி தாமோதரன் (60) உட்பட 30 பேர் வந்துள்ளனர்.