திண்டுக்கல் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் கலெக்டர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது நிருபர்கள் அவரிடம், ‘‘காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகுகாலம். இந்த நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறீர்களே’’ என கேட்டனர். அதற்கு மன்சூர் அலிகான், ‘‘எனக்கு ராகுகாலம், நல்ல காலம் தெரியாது. எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான்’’ என்றார். முன்னதாக அவர், சென்னை அரும்பாக்கத்தில் வசிப்பதாக வாக்காளர் சான்றிதழை காட்டினார். சீல் இல்லாததால் தேர்தல் அலுவலர்கள் ஏற்று கொள்ள மறுத்தனர்.
உடனே அவர், ‘‘பணத்தை எதிர்பார்த்து சீல் வைக்காமல் விட்டு விட்டனர்’’ என சென்னை மாநகராட்சி அலுவலர்களை கடுமையாக திட்டினார். மேலும் விண்ணப்பத்தில் மன்சூர் தனியாகவும், அலிகான் தனியாகவும் எழுதி இருந்தனர். அதற்கு அவர், ‘‘இந்தாப்பா என் பெயர் ஒண்ணுதாம்பா. நீங்க 2 பேராக எழுதினா நான் பொறுப்பாக முடியாது. ஒண்ணா மன்சூர்அலிகான்னு சேர்த்து எழுதுங்க’’ என அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.தொடர்ந்து மன்சூர் அலிகான் புதிய வாக்காளர் சான்றிதழை வாங்கி வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்வதாக உறுதியளித்து சென்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி