சென்னை: தேமுதிக, அதிமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரேமலதா பிரசாரம் செய்கிறார். விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடாததால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. அந்த கட்சி விருதுநகர், சென்னை வடக்கு, திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகள் போட்டியிடுகிறது. தேமுதிக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பிரசாரத்தில் ஈடுபட கூடாது என்று அவருக்கு டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால், அவர் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.