×

சோளிங்கர் அருகே இன்று குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்

சோளிங்கர்: சோளிங்கரில் உள்ள ஜோதிமோட்டூர் பஸ் நிறுத்தம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். சோளிங்கர் அடுத்த ஆராஞ்சி ஊராட்சிக்குட்பட்ட ஜோதிமோட்டூர் கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு  வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கவில்லையாம். பின்னர், இதுகுறித்து அப்பகுதிமக்கள் ஊராட்சி செயலர் மற்றும் காவேரிப்பாக்க்ம் பிடிஓ அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், அப்பகுதிமக்களுக்கு குடிநீர் கிடைக்காமல், அவதிப்பட்டு வந்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் இன்று காலை பரவத்தூர்-பாராஞ்சி சாலையில் உள்ள ஜோதிமோட்டூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பிடிஓ அலுவலத்திடம் எடுத்துக்கூறி இதற்கான தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர். பின்னர்,  பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sholingar , Sholinger, drinking water, civilian, stir
× RELATED சோளிங்கர் அருகே சிலிண்டர் வெடித்த...