குளச்சல்: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமுறைப்படி அரசியல் கட்சி தலைவர்களின் உருவசிலைகள் துணியால் மூடி வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே அனுமதி பெறாமல் அரசியல் கட்சிகள், அமைப்புகள் பொதுமக்களுக்கு இடையூறாக பொதுவிடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை பீடத்துடன் அகற்றி 25ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதி மன்றம் நகராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து குளச்சல் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் கீதா தலைமையில் நகராட்சி பணியாளர்கள் நேற்று அண்ணாசிலை சந்திப்பு, காந்தி சந்திப்பு, பயணியர் விடுதி சந்திப்பு, அரசு மருத்துவமனை சமீபம், நகராட்சி அலுவலகம் சமீபம், பீச் சந்திப்பு, பள்ளி முக்கு சந்திப்பு, கொட்டில்பாடு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து கட்சி கொடி கம்பங்களை பீடத்துடன் அகற்றினர். இதனால் அரசியல் கட்சி நிர்வாகிகளிடையே திடீர் பரபரப்பு ஏற்பட்டது.