மதுரை: மதுரையை சேர்ந்த கேசவன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், இந்தியாவில் சர்க்கரை (நீரிழிவு) நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பரிசோதனை கருவி, ஸ்டிரிப், மாத்திரைகள், சாக்லேட், பழங்கள், இன்சுலின் போன்றவற்றை நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வு அறைகளுக்கு எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கின்றனர். இவற்றை எடுத்துச்செல்ல அனுமதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார். இம்மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மருத்துவ நிபுணர்கள் நேரில் ஆஜராகி, ‘‘சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சில அத்தியாவசிய தேவைகள் உள்ளன. அவை தாமதமானால் அவர்களுக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும்’’ என தெரிவித்தனர்.