தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே கோயில் விழாவிற்கு சென்று விட்டு இன்று அதிகாலை கிராமத்திற்கு திரும்பிய பெண் சத்துணவு ஊழியர் யானை மிதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கெத்தள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மனைவி ராஜம்மா (45). இவர் அருகே உள்ள அரசு பள்ளியில் சத்துணவு ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு அய்யூர் கிராமத்தில் நடந்த மாதேஸ்வரன் கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு, அதிகாலையில் தனியாக கெத்தள்ளி கிராமத்திற்கு திரும்பி கொண்டிருந்தார். கெத்தள்ளி-குடிசலூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஒற்றை யானை ராஜம்மாவை தூக்கி வீசி, மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜம்மா உயிரிழந்தார்.