திருக்காட்டுப்பள்ளி: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரி மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் சுவேதா(15). வயதுக்கேற்ற வளர்ச்சியின்றி சுவேதா 2 அடி உயரம் மட்டுமே உள்ளார். இவர், அருகில் உள்ள பூண்டி சின்னராணி உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை தினமும் அவரது அண்ணன்தான் பள்ளிக்கு அழைத்து செல்வார். மாலையில் அங்கிருந்து வீட்டுக்கு அழைத்து வருவார். நேற்று 10ம் வகுப்பு பொது தேர்வு எழுத திருக்காட்டுப்பள்ளிக்கு வந்திருந்த போது அவரை சக பள்ளி மாணவிகள் தூக்கி வந்து தேர்வு எழுத வைத்தனர். பின்னர் அந்த மாணவிகளேஅவரை வீட்டிற்கு தூக்கி சென்று விட்டனர். 2அடி உயரமுள்ள மாற்றுத்திறனாளி மாணவி சுவேதாவுக்கு சக தோழிகள் உதவியது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.