தாம்பரம் அருகே பயங்கரம் மனைவி சரமாரி அடித்துக்கொலை : கணவன் தலைமறைவு

தாம்பரம்: தாம்பரம் அடுத்த கோவிலாஞ்சேரி, அகரம், தென்பிரதான சாலையை சேர்ந்தவர் குணசேகரன் (54). விவசாய நிலம் மற்றும் மாடுகள் வைத்து பராமரித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் விழுப்புரத்தை சேர்ந்த தேவி (35) என்ற இளம்பெண் தனது கணவனுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறி சென்னை தாம்பரம் பகுதிக்கு வந்துள்ளார்.

பின்னர், குணசேகரனிடம் வந்து குடும்ப பிரச்னையை எடுத்து கூறி ஏதாவது வேலை வழங்குமாறு கேட்டதாகவும், அதற்கு குணசேகரன் தனது விவசாய நிலம், மாடுகளை பராமரிக்கும் பணியை தேவிக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி தேவியின் கணவர், தாம்பரத்துக்கு வந்து ஊருக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் தேவி, மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அங்கேயே தங்கி வேலை செய்வதாக கூறியதால் குணசேகரன் அனுமதி தந்துள்ளார். இதற்கிடையே கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 16ம் தேதி முதல் திடீரென தேவி மற்றும் கணவர் மயமாகினர். இருவரும் தங்களது சொந்த ஊருக்கு சென்று இருப்பார்கள் என குணசேகரன் கருதியதால் கண்டுகொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், நேற்று காலை குணசேகரன் நிலத்தில் உள்ள செப்டிக் டேங்கில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. ஊழியர்கள் செட்டிக் டேங்க்கை திறந்து பார்த்தனர். அதில் தேவி சடலமாக கிடந்ததை கண்டு குணசேகரன் அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தேவியின் கணவரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: