லண்டன்: வங்கிக் கடன் மோசடியில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க லண்டன் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வங்கிக் கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்ஷி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் லண்டனுக்கு தப்பிச் சென்றார். இதையடுத்து நீரவ் மோடி மீது சிபிஐ, அமலாக்கத்துறையினர் நிதி மோசடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளன. மேலும் நீரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அவரை கைது செய்ய இன்டர்போலிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் நீரவ் மோடி எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியாமல் இருந்து வந்தது. இதனிடையே நீரவ் மோடியின் மனைவிக்கு எதிராக மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவை பிறப்பித்தது.